×

கருட தரிசனம் பாருங்கள் கவலையின்றி வாழுங்கள்

சிலவற்றைப் பார்த்தால் யோகம். சிலவற்றைப் பார்க்காமல் இருந்தால் யோகம். பார்க்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்பதன் மூலம் நம்முடைய யோக பலன்களை வளர்த்துக்கொள்ளலாம். உயர்ந்த விஷயங்களைப் பார்ப்பதை தரிசனம் என்று சொல்லுவார்கள். கோயில்களுக்குச் சென்று இறைவனை, “பார்த்துவிட்டு வந்தோம்” என்று சொல்வதில்லை. “தரிசனம் செய்துவிட்டு வந்தோம்” என்றுதான் சொல்லுவார்கள். எந்த தரிசனம் உயர்ந்ததோ, மங்கலமானதோ அதற்கு சுதர்சனம் (நல்ல தரிசனம்) என்று பெயர். சில பெருமாள் கோயில்களில் தனியாக சுதர்சனர் சந்நதி இருக்கும். அதைத்
தவறாமல் தரிசித்து வர வேண்டும்.

‘‘வனமாலி கதி சார்ங்கி சங்கீ சக்ரீச நந்தகி
ஸ்ரீமான் நாராயணு விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.”

என்று சொல்லித்தான், பெருமாளை சொல்வார்கள்.

அவ்வகையில் தரிசனங்களில் உயர்ந்த தரிசனம் கருட தரிசனம். பெருமாள் கோயில்களில் நான்கு மூலைகளிலும் கருடனை தரிசிக்கலாம். கருடன் சந்நதி, பலிபீடம், கொடிமரம் பிறகுதான் பெருமாள் சந்நதி. பெருமாள் கோயிலை “புள்ளரையன் கோயில்’’ என்றே ஆண்டாள் பாடுகிறாள். `புள்’ என்றால் பறவை. `அரையன்’ என்றால் தலைவன். பறவைகளுக்கு தலைவன் அல்லவா கருடன்.

கருடன், கச்யபர் – விநதை தம்பதிக்கு இரண்டாவது மகனாவார். ஆடிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். கருடாழ்வார், மங்களாலயன், பக்ஷிராஜன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேத ஸ்வரூபன், வைனதேயன் போன்ற எண்ணற்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவருக்கு ருத்ரை மற்றும் சுகீர்த்தி என்னும் இரண்டு மனைவியர் உள்ளனர்.

இன்றைக்கும் பல ஊர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கருட தரிசனத்திற்காக மாலை வேளையில் காத்திருப்பதைக் காணலாம். குறிப்பாக, வியாழக்கிழமைகளில் கருட தரிசனத்தைக் காண்பதற்காக சில குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து மக்கள் கூடுவார்கள். ஆயிரம் ஆயிரம் சுப சகுனங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்! கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை அசைக்காமல் இருந்தால், அது கருடன் என்று முடிவு செய்யலாம். வானத்தில் கருடனைப் பார்க்கும்போது கைகூப்பி வணங்கக் கூடாது.

கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. “மங்களானி பவந்து’’ என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும். கெட்ட சகுனங்கள், துர்சேட்டைகள், துர்குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால், சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்! பெருமாள் கோயில்களில் உற்சவங்கள் நடக்கின்றபொழுது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனசேவை நடக்கும். அதிலே கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வதைக் காண்பதற்காக கூட்டம் அலைமோதும். அதனை `கருட சேவை’ என்பார்கள். திருவரங்கம், காஞ்சிபுரம், திருப்பதி, நவதிருப்பதிகள், திருநாங்கூர், திருநாராயணபுரம் நாச்சியார் கோவில் ஆகிய திருத்தலங்களில் நிகழும் கருட சேவைகள் தனிச் சிறப்புடையது.

காஞ்சியில் கருடசேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம். எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ்வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும், காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார்.
இந்தக் காட்சி, வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள். கருடனை `வேதாத்மா’ என்று பெரியவர்கள் வர்ணிக்கிறார்கள். வேதத்தின் பொருளாகிய பெருமாள், வேதத்தின் மீது ஆரோகணித்து வருவதைத்தான் கருட சேவை என்று சொல்லுவார்கள்.

சாதாரணமாக நாம் கருடனை தரிசிக்கும் பொழுது, பெருமாளை தன் முதுகில் சுமந்து கொண்டு, யாரோ ஒரு பக்தனைக் காப்பாற்றுவதற்காக விரைவாகப் போகிறார் என்று கிராமத்தில் சொல்லுவார்கள். அந்த நேரத்தில் நாம் அவரை தரிசிக்கும் பொழுது நம்முடைய தோஷங்கள் எல்லாம் விலகிவிடும். ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து, மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), செண்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் நிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம். கருடனைப் போல், வேதம் பிரத்யட்சமாக தெரியும். ஆனால், கருடன்மீது கண்ணுக்குத் தெரியாமல் அமர்ந்து செல்லும் பெருமாளை போல, வேதத்தின் பொருளை உணரத்தான் முடியும். அது கண்ணுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் அர்ச்சாவதார பெருமாளை கருடன் மீது ஆரோகணம் செய்து கருட சேவை நடத்துகின்றார்கள். பெருமாளைக் காண்கின்ற கண்களால் கருட தரிசனத்தையும் காண வேண்டும்.

கருடனைத் தரிசிப்பது சுபசகுனம்

ஆகாயத்தில் கருடன் வட்டமிடுவதோ, குரலெழுப்புவதோ நல்லதொரு அறிகுறி. “கருட த்வனி” என்ற ஒரு ராகமே உண்டு. அதனைக் கேட்பது புண்ணியமானது. ராமாயணத்தில் ராம, லட்சுமணர்கள், விஷ அம்பால் அடிபட்டு மயக்க முற்று இருக்கின்றார்கள். பகவானே மனுஷ ரூபம் எடுத்து வந்ததால் அஸ்திர சஸ்திரங்களுக்கு கட்டுப்பட்டவன் போல் நடந்து கொள்ளுகின்றான். அப்பொழுது கருடன் மேலே பறந்து வர, அந்த நிழல் பட்டு, உடம்பில் தைத்திருந்த விஷ அம்புகள் நீங்குகின்றன. மனதில் தெளிவின்மையும், மயக்கமும், குழப்பமும், தோஷங்களும் விஞ்சி நிற்கின்ற பொழுது, கருட தரிசனத்தைக் காண்பதன் மூலமாக, தெளிவு பிறக்கும் என்பது சான்றோர் வாக்கு.

அதனால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கருட தரிசனம் காண்பதன் மூலமாக நம்முடைய தோஷங்கள் நீங்கும். மனம் தெளிவு பெறும். செயல்கள் வெற்றி பெறும். கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். காரணம், வேத ஒலிகளுக்குத் தாவரங்களை நன்கு வளர வைக்கும் சக்தி உண்டு. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்.
கருடனைத் தரிசித்தால் கிடைக்கும் நன்மைகள் அபாரமானது.

முதலில் கருடசேவையைத் தரிசிப்பதன் மூலம் அக அழுக்குகளாகிய பாவம் போகும். ஜாதகத்தில் பல தடைகளை உண்டுபண்ணும், ராகு – கேது தோஷமாகிய நாக தோஷம் போகும். சுப காரியத்தடைகள் நீங்கும். தோல் வியாதிகள், நீண்ட நாள் வியாதிகள் குணமாகும். கருட பஞ்சமி நாளில் விரதமிருந்து கருடனைப் பூஜைசெய்ய, பிறக்கும் குழந்தைகள் அறிவும், வீரமும் உடையவர்களாக விளங்குவர். ஒவ்வொரு கிழமையில் கருட தரிசனம் ஒவ்வொரு பலனைத்தரும்.

1. ஞாயிறு கருட தரிசனம் – நோய் அகலும்.
2. திங்கள் கருட தரிசனம் – குடும்ப நலம் பெருகும்.
3. செவ்வாய் கருட தரிசனம் – தைரியம் கூடும்.
4. புதன் கருட தரிசனம் – எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.
5. வியாழன் கருட தரிசனம் – சகல நன்மையை தரும்.
6. வெள்ளி கருட தரிசனம் – பணவரவு கிட்டும்.
7. சனி கருட தரிசனம் – நற்கதி அடையலாம்.

கருட தரிசனம் காணும்போது, `ஓம் தத்புருஷாய வித்மஹே ஸூவர்ண பட்சாய தீமஹி தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’ என்ற கருட காயத்ரி மந்திரத்தைச் சொல்வது நல்லது. அடுத்த இதழில், விருட்ச தரிசனம் குறித்து காண்போம்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post கருட தரிசனம் பாருங்கள் கவலையின்றி வாழுங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வெற்றி தரும் வெற்றிலை மாலை வழிபாடு!